77.1 சதவீதம் விசாரணை கைதிகள் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பகீர் தகவல்

Jaik

2021 ம் ஆண்டு டிசம்பர் 31 முடிய சிறையில் உள்ள 5.54 லட்சம் கைதிகளில் 4.27 லட்சம் கைதிகள் அதாவது 77.1 சதவீதம் விசாரணை கைதிகள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷியாம் சிங் யாதவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள விசாரணை கைதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, 2021 முடிய உள்ள தரவுகளின்படி உத்தரபிரதேசத்தில் மொத்தம் 90,606 விசாரணை கைதிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 21,942 கைதிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், 4,657 கைதிகள் பழங்குடியின வகுப்பினர், 41,678 பேர் இதர பிற்பட்ட வகுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 22,329 பேர் சுமார் 25 சதவீதம் முன்னேறிய வகுப்பினராக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதா என்ற மற்றொரு கேள்விக்கு இதுகுறித்து அரசிடம் தகவல் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *