விருதுநகர் மாவட்டம்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
—
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம் மற்றும் சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.03.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தண்டியேந்தல் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.1.76 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கிராம நூலக கட்டடத்தையும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தண்டியேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் இதர மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, தண்டியேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து, அங்கு பழுதடைந்த கட்டடத்தை பார்வையிட்டு அதனை பராமரிப்பு பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், முடுக்கன்குளம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.5.65 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களத்தினையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10.19 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டடப் பணிகளையும், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ், ரூ.1.56 கோடி மதிப்பில் முடுக்கன்குளம் – காரியாபட்டி- நரிக்குடி சாலைகள் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும்,
சூரனூர் ஊராட்சியில், தேனூர் பெரிய குளம் கண்மாயில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.12.73 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதகு மற்றும் வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகளையும்,
சூரனூர் ஊராட்சி, தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.3.08 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள 3 பள்ளி வகுப்பறை கட்டடங்களையும் மற்றும் தேனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.3.90 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, செயற்பொறியாளர், திருமதி இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சிவக்குமார், திருமதி சண்முகப்பிரியா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்
வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள்
