முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அளித்த பதில்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கலாஷேத்திரா பவுன்டேஷன்
விவகாரம் குறித்து மாண்புமிகு உறுப்பினர்கள் திரு. எஸ்.எஸ். பாலாஜி, திரு.
தி. வேல்முருகன், திரு. கு. செல்வப்பெருந்தகை, திரு. ட்டி. இராமச்சந்திரன் ஆகியோர்
அவையினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே
உரையாற்றியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை உங்கள் அனுமதியோடு நான்
தெரிவிக்க விரும்புகிறேன்.
ஒன்றிய அரசினுடைய கலாச்சாரத் துறையின்கீழ் இயங்கிக்
கொண்டிருக்கக்கூடிய, கலாஷேத்திரா பவுன்டேஷன் விவகாரத்தைப் பொறுத்தவரை,
தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து “பாலியல் தொல்லை” என
டுவிட்டர் செய்தி போட்டு, 21-3-2023 அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஜி.பி.-
க்குக் கடிதம் எழுதியது. இது தொடர்பாக, கலாஷேத்திரா பவுன்டேஷன் இயக்குநர்,
நமது மாநில காவல் துறைத் தலைவரைச் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் பாலியல்
புகார் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பிறகு தேசிய மகளிர் ஆணையமே “நாங்கள்
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு விசாரித்தோம்; அந்த
விசாரணையை முடித்து வைத்து விட்டோம்” என 25-3-2023 அன்று டி.ஜி.பி.-க்குக்
கடிதம் எழுதி தெரிவித்திருக்கிறார்கள்.
பின்னர், கடந்த 29-3-2023 அன்று மீண்டும் தேசிய மகளிர் ஆணையத்தின்
தலைவரே வந்து கலாஷேத்திராவில் இருக்கக்கூடிய 210 மாணவிகளிடம் விசாரித்து
விட்டுச் சென்றுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை
என்றும் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காவல் துறைக்கு இதுவரை
எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில்,
மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா
பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு
மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *