மாவட்ட அளவிளான போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது
முதலமைச்சர் “நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி மற்றும்
சிலம்பம் விளையாட்டுகளுடன் 12 விளையாட்டுகளை உள்ளடக்கிய முதலமைச்சர்
கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறும்” என்ற அறிவிப்பினை
வெளியிட்டார்கள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தால் நடத்தப்படும் 2022-23ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர்
கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் தொன்மையான
பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி மற்றும் சிலம்பாட்டத்தினைச் சேர்த்திடவும்,
முந்தைய காலங்களில் ஒரே ஒரு பிரிவில் மட்டும் 10 விளையாட்டுகளில் நடத்தப்பட்ட
மாநில போட்டிகளில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் மாற்றுத்திறனாளிகள்,
பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய 5 பிரிவுகளில்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திடவும்,
இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு,
மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட
அளவிலான போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்களை அமைத்திட கோரும்
கோப்பில் கையொப்பமிட்டார்.
அதன்படி முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது
நமது பாரம்பரிய விளையாட்டுகளான கபாடி மற்றும் சிலம்பம் விளையாட்டுகள்
உட்பட 15 விளையாட்டுப் போட்டிகள் அனைத்து வகையான விளையாட்டு
வீரர்களையும் இணைத்து நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள்பள்ளி, கல்லூரி,
பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட
இருபாலருக்கும் நடத்தப்படுகின்றன.
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட அளவில், மண்டல
அளவில் மற்றும் மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
38 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் ஒவ்வொரு
மாவட்டத்தின் மூலை முடுக்கிலிருந்தும் 3,71,351 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன்
கலந்துகொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 2023
மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023-ம் மாதம் முடிய நடைபெற்றது.
அனைத்து விளையாட்டுப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி
பெறுபவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அனைத்து
மாவட்டங்களிலும் வெற்றி பெறும்/ தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள் /வீரர்கள்
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில்
பங்கேற்பார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவிலான
போட்டிகள் முடிவுற்ற நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெற்று
வருவதால் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் 2023 மே மாதம் முதல் வாரம் /
இரண்டாவது வாரத்தில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள விழாக்களில்
வழங்கப்படும்.
மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையத்தின் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கங்களின்
வசதிகளை பயன்படுத்தி 2023 ஜுன் மாதத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டு வருகிறது. இம்மாபெரும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில்
இருந்து 27,000-க்கும் மேற்பட்ட உயர்மட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க
உள்ளனர்.
மாநில அளவிலான போட்டியில், பதக்க நிலைக்கு ஏற்ப அதிக புள்ளிகள்
பெறும் முதல் 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் கோப்பை வழங்கப்படும்.
இத்திட்டத்தினை செயல்படுத்திட அரசு ரூ.50.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.