பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் – கமல்ஹாசன் குரலில் வெளியானது

நடிகர் கமல்ஹாசனின் குரலில் பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னை, எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இந்த திரைப்படம் நேரடியாக வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மொத்தம் 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை, மணிரத்னம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுத்துள்ளார். இதற்காக அவர் திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார். குறிப்பாக முதல் பாகத்தில் நடிகர் கமல்ஹாசனின் குரலில் ரசிகர்களுக்கு சோழர் வரலாறு குறித்த ஒரு அறிமுகம் வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், வரும் 28-ந்தேதி ‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீசாக உள்ளது. இந்த படத்தை காண வரும் ரசிகர்களுக்கு முதல் பாகம் பற்றிய ஒரு முன்னோட்டம் வழங்கப்படும் என மணிரத்னம் தெரிவித்திருந்தார். அதன்படி, கமல்ஹாசனின் குரலில் பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் குறித்த வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *