தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று 30-3-2023, வைக்கம் போராட்ட
நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து, விதி 110-ன்கீழ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அளித்த அறிக்கை
மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று
வரலாற்றிலே ஒரு முக்கியமான நாள். 1924 ஆம் ஆண்டு, மார்ச் 30 அன்று, மாபெரும்
சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம்
தொடங்கியதன் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று. (மேசையைத் தட்டும் ஒலி)
அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் வைக்கம் போராட்டம் வெற்றி
பெற காரணமாக இருந்த பகுத்தறிவுப் பகலவன் வைக்கம் வீரர் தந்தை பெரியாரைப்
போற்றும் விதமாக, (மேசையைத் தட்டும் ஒலி) வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு
ஒன்றை விதி 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு,
இந்த மாமன்றத்தில் வெளியிடுவதை என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பாக
எண்ணி மகிழ்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
தந்தை பெரியார் அவர்களைப் பற்றி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்
அவர்கள் எழுதிய கவிதை வரிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு
பொங்குற்ற வேங்கை போல்
நிமிர்கின்ற பார்வை உண்டு
2
செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு
வெண் சங்கொத்த கண்களிலே
விழியிரண்டும் கருவண்டு
அதில் சாகும்வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின்
இவரோ, படுகிழமாய்ப் போன பின்னும்
பம்பரமாய்ச் சுற்றி வந்தார்; (மேசையைத் தட்டும் ஒலி)
எரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடி ஒலியாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்ஸ் நகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம்தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்.
இவை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பகுத்தறிவுப் பகலவன்
தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எழுதிய கவிதை வரிகள்.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக, 1967-ஆம் ஆண்டு ஆட்சிப்
பொறுப்பை ஏற்றபோது, ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’ என்றார்
3
பேரறிஞர் அண்ணா. (மேசையைத் தட்டும் ஒலி) உடனடியாக பேரறிஞர் அண்ணா,
முத்தமிழறிஞர் கலைஞர் முதலானோர், திருச்சி சென்று பெரியாரைத்தான்
முதன்முதலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். இப்போது ஆறாவது முறை ஆட்சிப்
பொறுப்பேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசும், இப்போது தந்தை
பெரியார் காட்டிய சமூக முன்னேற்றப் பாதையில்தான் பயணிக்கிறது.
“ஈ.வெ.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில்
உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக
ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு, அதே பணியாய் இருப்பவன். இதைச்
செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப்
பணியைச் செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு,
தொண்டாற்றி வருகிறேன்” என்று அறிவித்து, 95 வயது வரை, இந்த நாட்டுக்காகவும்,
இந்த நாட்டு மக்களுக்காக சமூகநீதியை நிலைநிறுத்திடவும் அவர் நடத்திய
சுயமரியாதைப் போராட்டங்கள் பற்பல. அவற்றில் மிக முக்கியமான
போராட்டம்தான் வைக்கம் போராட்டம்.
1924-25 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது,
இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது; இந்தியாவின்
கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது;
ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது
என்று சொன்னால், அது மிகையல்ல.
4
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கேரள மாநிலம், கோட்டயம்
மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள
தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி
நடந்ததுதான் வைக்கம் போராட்டம். 1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள்,
கேரளத் தலைவர் டி.கே.மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம்.
அந்தப் போராட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, அதே பகுதியைச் சேர்ந்த
முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.
தலைவர்கள் இன்றி போராட்டம் தவித்தது. இந்தச் சூழலில், கேரளத் தலைவர்களின்
அழைப்பின் பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த
தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை
ஏற்றார். பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.
வெகுமக்களிடம் அந்தப் போராட்டம் குறித்து பரப்புரை செய்து, போராட்டத்தை
வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். போராட்டக் காலத்தில் இரண்டு முறை
பெரியார் கைது செய்யப்பட்டார். முதல்முறை, ‘அருவிக் குட்டி’ என்ற ஊரின் காவல்
நிலையச் சிறையில், ஒருமாத காலம் சிறை தண்டனை அனுபவித்தார். இரண்டாம்
முறை வழங்கப்பட்ட நான்குமாதக் கடுங்காவல் தண்டனையை, திருவனந்தபுரம்
சிறையில் கழித்தார். மற்றவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள் போல
நடத்தப்பட்டார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்களின் கையிலும், காலிலும்
விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை அணிவிக்கப்பட்டு வைக்கப்பட்டு
இருந்தார். சாதாரண கைதியைப் போலவே தந்தை பெரியார் நடத்தப்பட்டார்.
5
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், உடனே திரும்பாமல், வைக்கம் சென்று
மீண்டும் போராடினார் தந்தை பெரியார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74
நாட்கள் சிறையில் இருந்தார்; 67 நாட்கள் அங்கேயே தங்கி போராடினார்; மக்களைத்
திரட்டினார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம்,
1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. 1925 நவம்பர் 29 ஆம் நாள் பெரியார்
தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. ‘வைக்கம் வீரர்’ என்று
பெரியாரைப் பாராட்டினார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. அவர்கள். 'திருவனந்தபுரம்
சிறையில் இருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது' என்று சுதேசமித்திரன் இதழில்
எழுதினார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.
போராட்டக்காரர்களுக்கும், மன்னருக்குமான பேச்சுவார்த்தையை நடத்திய
அண்ணல் காந்தியடிகள் அவர்கள், தந்தை பெரியாரையே உடன் அழைத்துச்
சென்றார். கோயில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையைப்
பெற்றுத்தந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும்
அழைக்கப்பட்டார்கள். 1929 ஆம் ஆண்டு மகர் போராட்டத்தைத் தொடங்கிய
அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தனக்கு ஊக்கமளித்த போராட்டமாக வைக்கம்
போராட்டத்தையே குறிப்பிடுகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம்
போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரையில் வைக்கம்
போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எளிய மக்களுக்காக
எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி
வெற்றி கண்ட தந்தை பெரியார் அவர்களின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக்
6
கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு
விழா” நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பதை
இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் உண்மையிலேயே நான் மட்டற்ற மகிழ்ச்சி
அடைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30 ஆம் நாளில், வைக்கம் போராட்ட
நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின்
நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு
முழுவதும் நடத்தப்படும். போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும்,
வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில்
பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை
உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க
விரும்புகிறேன்.
1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
“வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள
முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு
அழைப்பாளராகப் பங்கேற்கிறேன். வைக்கம் போராட்டம் நடைபெற்ற
இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை
செலுத்துகிறோம்.
7
2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான்
அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள
மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது.
3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில்
உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியிடாக இது
வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப்
பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.
4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய
இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள்
பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு
அரசால் நடத்தப்படும்.
5. எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை
நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள்
நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்
ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது”
சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால்
வழங்கப்படும்.
6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை
நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப்
8
பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய்
நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை
வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று
புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல்
தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம்
போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி
மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-
வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக்
கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று
கொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்
கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நூல்,
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும்.
11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை
பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட
நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.
9
இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக
நிறைவேற்றப்படும்.
ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து,
பேசிய கொள்கைகளை நிறைவேற்றும் சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது,
இந்திய அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கத்துக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப்
பெரிய பெருமை. அத்தகைய பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு
இருக்கும்போது, வைக்கம் நூற்றாண்டு விழா வருவது பொருத்தமான ஒன்று.
சாதாரண இராமசாமியாக இருந்தவர் தந்தை பெரியாராக வளரக் காரணமான
போராட்டக் களம் அது. அத்தகைய சமூக சீர்திருத்த நோக்கம் கொண்டவர்களாக
இன்றைய இளைய சமுதாயம் திகழ, இதுபோன்ற கடந்தகால வரலாறுகளை நாம்
நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
பெரியார் என்பவர், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டும் சொந்தமானவர்
அல்ல; அவர் மொழி கடந்தவர்; நாடு கடந்தவர் என்பதை அவரது கருத்துகளின்,
செயல்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவர். சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம்,
சமூகநீதி, இன உரிமை ஆகியவை உலகளாவிய கொள்கைகள். நேற்றைய
கிளர்ச்சிக்கும், இன்றைய முயற்சிக்கும், நாளைய வளர்ச்சிக்கும் அடிப்படையானவை
தந்தை பெரியாரின் கருத்தியல்கள். அத்தகைய சுயமரியாதைச் சமதர்மப் பாதையில்
நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படும் என்பதைத் தெரிவித்து,
அமைகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)