நிலக்கரி டெண்டர் ரத்து! முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி சொன்ன விவசாயிகள்

டெல்டா பகுதியில் மத்திய அரசின் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை விவசாயிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டின் முக்கிய உணவு உற்பத்தி மண்டலமான காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எடுப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் ஏல அறிவிப்பு வெளியிட்டது.அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் முதலலமைச்சர் ஸ்டாலின் 4.4.2023 அன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 5.4.2023 அன்று காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையினை இரத்து செய்திட கோரி சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் ஏல அறிவிப்பினை இரத்து செய்தது.காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி, இரத்து செய்திட நடவடிக்கை எடுத்தமைக்காக, முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (11.4.2023) தலைமைச் செயலகத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *