செலவோ ரூ.60 கோடி: வசூலோ ரூ.6 கோடி சாகுந்தலம் படத்தால் சோகத்தில் சமந்தா

சென்னை: ‘சாகுந்தலம்’ படத்தின் படுதோல்வியால் சோகத்தில் மூழ்கியிருக்கிறார், சமந்தா. அனுஷ்கா, நயன்தாரா பாணியில் சமந்தாவும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு ‘யசோதா’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில், சரித்திரக் கதையான ‘சாகுந்தலம்’ என்ற படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான இப்படத்தை சமந்தா அதிகமாக எதிர்பார்த்தார். காரணம், அவரை மட்டுமே முன்னிலை கேரக்டராகக் கொண்டு உருவான படங்களில், அதிக பட்ஜெட்டில் இது தயாரிக்கப்பட்டிருந்தது. இதை தெலுங்கு முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு வாங்கி வெளியிட்டார்.

கடந்த வாரம் ‘சாகுந்தலம்’ படம் வெளியானது. ஆனால், படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே இப்படம் சரியில்லை என்று, கடுமையான விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. ரூ.60 கோடி அளவு பட்ஜெட்டில் படம் உருவானது. 3 மொழிகளிலும் சேர்த்து முதல் வாரத்தில் ரூ.6 கோடி மட்டுமே படம் வசூலித்தது. இதனால், இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்திருப்பதால் சமந்தா சோகத்தில் மூழ்கி இருக்கிறார். இதனால், புதிய படங்களில் நடிக்க வாங்கும் அவரது சம்பளம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *