தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி
சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை
ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு, 2022-ஐ, மறுஆய்வு செய்திடக் கோரி,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு
இருக்கிறேன்!
இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன்
காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான
நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது
உரையை நான் தொடங்குகிறேன்.
சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி
சூதாட்டத்தில் 17 இலட்சம் ரூபாய் வரை இழந்து, அந்தக் கடனைக் கட்ட முடியாமல்
தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி
வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். ''தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை
செய்யுங்கள்; என்னைப்போல் பலரும் தங்களது குடும்பத்தை அனாதையாக விட்டுவிட்டுச்
செல்லக் கூடாது. இத்தகைய நிலை யாருக்கும் வரக்கூடாது" என்று அவர்
குறிப்பிட்டுள்ளார். ''எனது தற்கொலையே கடைசி தற்கொலையாக இருக்கட்டும்" என்று
எழுதி வைத்துவிட்டு, சென்னையைச் சேர்ந்த வினோத்குமார் தற்கொலை செய்துள்ளார்.
நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கின்றன.
இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தைக் கையில்
வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான்,
இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழ்நாடுஅரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்
மரியாதைக்குரிய கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின்
சார்பில் அமைத்தோம். அரசின் சார்பில் அமைக்கப்பட்ட இக்குழு 27-6-2022 அன்று
தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில்
அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி செல்லும் மாணவர்களுக்கிடையே, இணையவழி
விளையாட்டு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்காக,
பள்ளிக்கல்வித் துறை ஜூலை 2022-ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்தக்
கணக்கெடுப்பில் தமிழ்நாட்டிலுள்ள 2,04,114 அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து
கோரப்பட்டது. மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 74
விழுக்காடு ஆசிரியர்கள் சொன்னார்கள். மாணவர்களின் நுண்ணறிவு ஈவு, எழுதும் திறன்
மற்றும் படைப்பாற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 64 விழுக்காடு ஆசிரியர்கள்
சொன்னார்கள். மாணவர்களின் தன்மதிப்புத் திறன் குறைந்து காணப்படுவதாகவும்,
மாணவர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதாகவும், மாணவர்களிடையே ஒழுக்கக்
குறைபாடு இருப்பதாகவும் 75 விழுக்காட்டிற்கு மேலான ஆசிரியர்கள் சொன்னார்கள்.
இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்றப்பட்ட,
உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி
விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7-8-2022 அன்று கருத்துகள்
கேட்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. அதில்,
10,708 மின்னஞ்சல்களில், இணையதள சூதாட்டத்தையும், இணையதள ரம்மி
விளையாட்டையும் தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 மின்னஞ்சல்களில் மட்டுமே தடை செய்வதற்கு எதிராக கருத்து
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள விளையாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரநிதிகள், அரசியல்
கட்சிப் பிரமுகர்கள், சமூக சிந்தனையாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் ஆகியோருடன் 11-8-2022 மற்றும் 12-8-2022 ஆகிய நாட்களில் உள்துறை
கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம்
நடத்தி, கருத்துகள் பெறப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. K. சந்துரு குழு அளித்த
பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித் துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு
அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர
தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின்
அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு
26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல்
மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம், 2022, மாண்புமிகு ஆளுநர்
அவர்களால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு
அரசின் அரசிதழின் பகுதி IV, பிரிவு2-ல் அக்டோபர் 3, 2022-ல் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு, மேற்கண்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்டமுன்வடிவு
தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல்
மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர்.
தமிழ்நாடு சட்டமுன்வடிவு எண்.53/2022 என்ற இந்தச் சட்டமானது கடந்த
19-10-2022 அன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு உறுப்பினர்களால்
நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக 26-10-2022 அன்று
சட்டத் துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல்
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 23-11-2022 அன்று சில விளக்கங்களைக் கேட்டிருந்தார்.
இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அவருக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. மாண்புமிகு சட்ட அமைச்சர் அவர்களும் 1-12-2022 அன்று ஆளுநர்
அவர்களை நேரில் சந்தித்து மீண்டும் விளக்கத்தை அளித்தார்.
ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள்
கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்குமாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளார். மாண்புமிகு ஆளுநர் அவர்கள்
எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின்
பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு
வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல்
பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை
தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது
மாண்புமிகு உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும்
மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற
உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன்.
இந்தச் சட்டம் அறிவால் மட்டுமல்ல, இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்
என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அரசியல் காரணங்களில்,
கொள்கைகளில் நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம், அப்படி எழுவது
இயற்கையானதுதான். ஆனால், மனித உயிர்களைப் பலி வாங்கும் ஆன்லைன்
சூதாட்டத்தை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க
முடியாது, இருக்கவும் கூடாது. 'எனது மரணம் கடைசியாக இருக்கட்டும்' என்ற சோகக்
குரலும், 'என் குடும்பத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு இன்னொரு குடும்பத்துக்கு ஏற்படக்
கூடாது' என்ற அழுகுரலும் இனியொரு முறை இந்த மாநிலத்திலும் எழக்கூடாது.
எழுமானால், சட்டத்தின் பொருளும் மாநிலத்தின் அதிகாரமும் நீர்த்துப் போனதன்
அடையாளமாக ஆகிவிடும். சட்டம் ஒழுங்கைப் பேணுவதும், மக்களைப் பாதுகாப்பதும்,
குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதும், குற்றவாளிகளிடம் இருந்தும் மக்களைக்
காப்பதும் மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையாகும்.
மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும்
ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு,
மீண்டும் சொல்கிறேன் – மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. மாண்புமிகு ஒன்றியதகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர்
அவர்கள், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய
கேள்விக்கு, 21-3-2023 அன்று பதில் அளிக்கையில், பந்தயம் மற்றும் சூதாட்டமானது,
அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34-
வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில
அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மனச்சாட்சியை உறங்கச் செய்து
விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில்
தெரிவிக்க நான் விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) எந்தச் சட்டத்தின் நோக்கமும்
மக்கள் நலன் மட்டும்தான். மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும்.
சட்டவியல் என்பதே, சமூக அறிவியல் தான் என்பதை உலகம் முழுவதும் இருக்கும்
சட்டமேதைகள் ஒப்புக் கொள்வார்கள். பயன்பாட்டில் நீதி என்பது, அற நீதி (Natural or
Moral Justice) என்றும் சட்ட நீதி (Legal Justice) என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே
நீதிநெறி, ஒழுக்க விதிகளை காப்பாற்றவே சட்டநீதியை அடிப்படையாகக் கொண்டு,
தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி
ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 இம்மாமன்ற உறுப்பினர்கள் முன்
வைக்கப்படுகிறது.
இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில்
நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க
அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான்
கேட்டுக் கொள்கிறேன்.