பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் மழைக்காலங்களில் நீர்
தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,
தலைமைச்செயலாளர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம்
நடைற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர், குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி
நிருவாகம், கூடுதல் தலைமைச்செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை,
ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 15 மண்டல கண்காணிப்பு அலுவலர்கள்
கலந்துகொண்டனர். மேலும், தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்களும்
இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பல்வேறு துறைகளின் பணிகள் நடைபெறும்
வேகம் குறித்து கேட்டறிந்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி
மாநகராட்சிகளுக்கு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் மழைநீர் வடிகால்
பணிகளுக்காக ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்பாக சென்னை
பெருநகர மாநகராட்சி, நகராட்சி நிருவாகம் மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம்
தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசித்து, அவைகளுக்கு உடனடியாக
ஒப்பந்தங்கள் கோரி பணிகளை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க அறிவுறித்தினார்.
சென்ற ஆண்டு நடந்த பணிகளில் மீதமுள்ள பணிகளை உடனடியாக முடிக்க
உத்தரவிட்டார். அதற்கான கால அட்டவணைகளை தயார்செய்து, ஆகஸ்ட், 2023-க்குள்
அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுரை வழங்கினார்.
பணி நடைபெறும் இடங்களில், தரம் மற்றும் பாதுகாப்பில் எந்த குறைபாடும்,
தொய்வும் இல்லாமல் பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்ந்து
கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அனைத்து மண்டலங்களின் இந்திய ஆட்சிப்பணி கண்காணிப்பு அலுவலர்கள் பணிகள்
நடைபெறும் இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து, பொது மக்களுக்கு எந்த சிரமமும்
ஏற்படாவண்ணம் அனைத்து பணிகளையும், இந்த ஆண்டு பருவ மழை தொடங்குவதற்குமுன்
முடிக்க உத்தரவிட்டார்.