கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்கள் சமூக நீதி பயன்களை பெற கோரும் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.19) தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு வரவேற்பு அளித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் : முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தீர்மானத்தை வரவேற்கிறது.

கொங்கு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் : முதலமைச்சர் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா : கிறிஸ்துவ ஆதிதிராவிடர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக சார்பில் தீர்மானத்தை ஆதரித்து வரவேற்பதோடு முதல்வர் நன்றி கூறுவதாக சதன் திருமலைக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனித் தீர்மானத்தில் பேசிய வானதி சீனிவாசனின் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்புச் செய்தது.

இதைத் தொடர்ந்து, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *