சென்னை: அடுத்த மாதம் புனித வெள்ளி, ஈத் திருநாள், அம்பேத்கர் பிறந்த நாள் என்று பல விடுமுறை நாட்கள் வருவதால் ஏப்ரல் மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.இப்போது நமது நாட்டில் கிட்டதட்ட அனைவருக்குமே பேக்கிங் என்பது முக்கியமாகத் தேவைப்படுகிறது. அரசின் பெரும்பாலான மானியங்கள் வங்கிகளில் நேரடியாக வங்கிக் கணக்கில் தான் வரவு வைக்கப்படுகிறது.இதனால் அனைவருக்குமே வங்கி சேவை என்பது கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. மத்திய அரசும் அனைவருக்கும் வங்கி சேவையை அளிக்க ஜன்தன் கணக்குகள் எனப் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.இப்போது என்ன தான் ஜிபே, போன்பே போன்ற தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் கூட இன்னுமே கிராமங்களில் வசிக்கும் மக்கள் வங்கிகளுக்கே சென்று நேரடியாகப் பணம் எடுக்கிறார்கள். ஸ்மார்ட் போன் இல்லாமல் போவது, தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது என்று இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வங்கிகள் முன்னால் இருக்கும் கூட்டத்தைப் பார்த்தாலே நமக்கு இது புரியும். இதற்கிடையே அடுத்த மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடியிருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.புனித வெள்ளி, ஈத் திருநாள், அம்பேத்கர் பிறந்த நாள் என்று பல்வேறு விடுமுறை நாட்கள் வரும் ஏப்ரல் மாதம் வருகிறது என்பதால் சுமார் இரண்டு வாரங்கள் வரை வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இதனால் வங்கிகளுக்குச் செல்லத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்ட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியால் வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், மொபைல் மற்றும் இணைய வங்கி மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பது நல்லதொரு செய்தியாகும்.ஏப்ரல் 1ஆம் தேதி, நாட்டின் அனைத்து வங்கிகளும் தங்கள் நிதியாண்டின் இறுதி வேலைகளைச் செய்து, முந்தைய கணக்குகளை முடித்து வைக்கும். இதனால் அன்று வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்குச் சேவை இருக்காது. ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 5ஆம் தேதி பாபு ஜக்ஜீவன் ராமின் பிறந்தநாள் காரணமாக தெலங்கானாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை நாளாகும்.அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு காரணமாக விடுமுறை அளிக்கப்படும். ஏப்ரல் 15ஆம் தேதி விஷு/போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம்/வங்காள புத்தாண்டு தினம், ஏப்ரல் 18இல் ஷப்-ல்-கதர், ஏப்ரல் 21 கரியா பூஜை/ஜுமாத்-உல்-விடா காரணமாகக் குறிப்பிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதேபோல ஏப்ரல் 22ஆம் ரம்ஜான் பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது..
இது தவிர அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இப்படி மொத்தம் அடுத்த மாதம் மட்டும் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனால் வங்கிகளுக்குச் செல்லத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேநேரம் மேல் கூறப்பட்டுள்ள சில விடுமுறை நாட்கள் மாநிலங்களைப் பொறுத்து மாறும் என்பதால் வங்கி செல்லும் முன்பு ஆர்பிஐ தளத்திலும் இது குறித்துச் சரிபார்த்துக் கொள்ளலாம்.